தமிழ்நாடு மேலிட செல்வாக்கு மமதையில் வலம் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோனது

மேலிட செல்வாக்கு மமதையில் வலம் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோனது

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூலை.27, 2015:-  முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறை சென்ற, இளவரசியின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட நெருக்கத்தால், தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற மமதையில், வலம் வந்த செந்தில் பாலாஜி மீது, கட்சியினர், மூத்த அமைச்சர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் புகார் அளித்ததால், அவர் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மிக நெருக்கமான, இளவரசியின் குடும்பத்தாருக்கு, மிகவும் வேண்டியவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதனால், கட்சியிலும், ஆட்சியிலும், அதிகாரம் பெற்றவராக வலம் வந்தார். மற்றவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், தனக்கென தனி ராஜாங்கம் அமைத்து செயல்பட்டு வந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா சிறை சென்ற நேரத்தில், முதல்வர் பதவியை ஏற்ற பன்னீர் செல்வமும், செந்தில் பாலாஜியை கண்டு நடுங்கினார். இவர், பிற துறைகளில் தலையிடும் நிலையில், போக்குவரத்து துறையில் பிற அமைச்சர்கள் குறிப்பாக, மூத்த அமைச்சர்கள் பலரும் தலையிடவே தயக்கம் காட்டினர். அதேபோல், அண்ணா தொழிற்சங்கத்தின் சின்னசாமிக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது. கடந்த ஆண்டு, போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்திய போராட்டம், இவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய, 'ஈகோ' காரணமாகவே, பல நாட்களாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் பாதிப்பு குறித்து, உளவுத்துறை அறிக்கை அனுப்பிய நிலையில், தன் மேலிட செல்வாக்கை பயன்படுத்தி, அந்த அறிக்கை, ஜெ., பார்வைக்கு செல்ல விடாமல் தடுத்து, தன் பதவியை காப்பாற்றிக் கொண்டார்.அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 6,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்ட நிலையில், பஸ் ஒன்றுக்கு, குறிப்பிட்ட தொகையை, கமிஷனாக பெற்றதாக கூறப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும், வட்டார போக்குவரத்து அலுவலர், பிரேக் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து துறை துணை கமிஷனர் மூலமாக, ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்து கழகங்களில், நடத்துனர்கள், ஓட்டுனர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில், அதிரடி வசூல் வேட்டை நடத்தப்படுவது குறித்து, மேலிடத்திற்கு தொடர் புகார்கள் குவிந்தன. மேலும், கரூர் எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பி துரைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையில், பனிப்போர் நிலவி வந்தது. அவர், செந்தில் பாலாஜி தொடர்பாக, சில ஆதாரங்களை, முதல்வரிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், மூத்த அமைச்சர்கள் இருவரும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தி.மு.க.,வினருடன், செந்தில் பாலாஜி நெருக்கம் காட்டியுள்ளார். போக்குவரத்துக் கழக பணியிடங்களில், தி.மு.க.,வினரை அதிக அளவில், பணி அமர்த்தி உள்ளார். தி.மு.க.,வினருக்கு, 'டெண்டர்'களையும் வழங்கி உள்ளார். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக இருந்த, பி.ஆர்.ஓ., மூலமாகவே, தி.மு.க., தலைமையை சென்றடைந்துள்ளதாக தெரிகிறது. இப்புகார்களை, உளவுத் துறை உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

ரகசிய கேமரா
*அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலை நடத்த, ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளராக, செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அப்போது, அவர் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை, சிலர் ரகசியமாக கேமராவில் பதிவு செய்து, கட்சி தலைமைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
* கரூர், திருச்சி, லால்குடி ஆகிய இடங்களில் உள்ள பெரிய மணல் குவாரிகளில் ஒன்று, செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதன் வரவு - செலவு கணக்கை, சரியாக காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
* செந்தில் பாலாஜி தம்பி அசோக், அண்ணன் பெயரை பயன்படுத்தி, அதிகாரிகளை மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

-- நமது நிருபர் குழு --

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்