மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல : கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மே.22, 2015:- மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமாக கருதி. கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மாவோயிஸ்ட் என்கிற பெயரில் வன்முறையில் இறங்குவதுதான் குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கைதான மாவோயிஸ்ட் ஒருவருக்கு ரூ. 1லட்சம் இழப்பீடு வழங்கிடவும் உத்தரவிட்டது.
கேரளாவில் ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள சிறப்புக் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி முகமது முஷ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மாவோயிஸ்ட்களின் கொள்கைகள், நமது அரசியலமைப்புடன் ஒத்துப்போவதாக இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல, மானுட விருப்பங்கள் குறித்து சிந்திப்பது மனித உரிமை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
ஆனால் தனிப்பட்ட ஒரு நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம். ஆனால் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது. அவரது நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்று காவல்துறை நிரூபிக்க வேண்டியதுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழக்கு தொடர்பான செலவாக ரூ.10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
ஆனால் மனுதாரர் காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கக்கோரியதையும் நீதிமன்றம் நிராகரித்தது. சட்டம் தண்டிக்கக் கூடிய செயல்களில் அவர் ஈடுபட்டதாக அவரைக் கைது செய்யவில்லை என்பதைக் கூறிய நீதிமன்றம், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது அவரது சுதந்திரத்திற்கு தடுப்பணை போடும் செயல் என்று கண்டித்துள்ளது.