"பிரதமர் நானே" - மிரட்டிய தயாநிதி : டிராய் முன்னாள் தலைவர் 'திடுக்' தகவல்!
மே.26, 2015:- தொலைத் தொடர்பு துறையின் பிரதமர் நானே; எனது உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
பிரதீப் பைஜால் "'The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise - A Practitioner's Diary" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் முக்கிய அம்சங்களை தி டைம்ஸ் ஆப் இண்டியா ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தயாநிதி மாறன், ஒளிபரப்பு நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அவரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். அதை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் நிராகரித்துவிட்டார்.
தொலைத் தொடர்பு துறை தொடர்பாக 2 துணைக் குழுக்களை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்திருந்தார். ஆனால் தயாநிதி மாறனோ இந்த குழுக்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
என்னிடம் தொலைத் தொடர்புத்துறையின் பிரதமர் நானே; நானே தொலைத் தொடர்புத் துறையின் அனைத்து முடிவுகளையும் எடுப்பேன்; என்னுடைய உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தயாநிதி மாறன் எச்சரித்திருந்தார்.
தயாநிதி மாறன் எச்சரித்தது போலவே மிக மோசமான எதிர்விளைவுகளை நான் எதிர்கொள்ளவும் நேரிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட ஒவ்வொரு வழக்கிலுமே சி.பி.ஐ தரப்பில் எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களுக்கு நான் ஒத்துழைப்பு தராவிட்டால் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டேன்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கே என்னை மிரட்டினார். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் சந்தித்தார்.
2004ஆம் ஆண்டு இந்த சந்திப்புக்குப் பின்னர் என்னிடம் பேசிய ரத்தன் டாடா, சன் குழுமத்துடன் டாடா ஸ்கையை இணைக்க வேண்டும் என மிரட்டினார். தயாநிதி மாறனின் மிரட்டலுக்கு தான் பணியவில்லை என ரத்தன் டாடா கூறினார்.
பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஒப்புதலுடனேயே ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்புத் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்வாறு பிரதீப் பைஜால் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.